அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இரி நகர குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தன.
இரி நகரத்தில்; 24 மணிநேரமும் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த மையத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களது திறமையை வளர்ப்பதற்காகாவும் சேர்த்து விடுவது வழக்கம்.
இந்நிலையில், அந்த பராமரிப்பு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மையத்தின் ஊழியர்களும் அதில் சிக்கிகொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து பராமரிப்பு மையத்தில் சிக்கி தவித்த ஒரு குழந்தை உள்பட 7 பேரை உயிருடன் மீட்டனர்.
அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், மீட்புகுழுவினர் வருவதற்கு முன்னர் 5 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பிறந்து 8 மாதம் முதல் 7 வருடங்களுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.